நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, February 28, 2011

மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழா.. புகைப்படங்கள்



மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழா..

                                                                    நாள்-28-02-2011
மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி,
பாட்டாளி  மக்கள் கட்சியினுடைய  நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே  சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி  அன்புமணி ராமதாஸ் அவர்களே, தம்பி  ஸ்டாலின் இங்கே வாழ்த்தும்பொழுது தேர்தல் திருமணம்  என்று குறிப்பிட்டார். இது மணமகனை மணமகள் வீட்டாரும், மணமகளை   மணமகன் வீட்டாரும்  தேர்வு செய்த பிறகு நடைபெறுகின்ற  திருமணம்.   ஏற்கனவே  இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம்.   எனவே  ஒரு நல்ல கூட்டணி     இரு குடும்பத்திற்கிடையே அமைந்து அந்தக் கூட்டணி   இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய  கூட்டணியாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு  நான் அவர்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா பேரன், டாக்டர் சுகந்தன் ராணிப்பேட்டை குணசேகரன் அன்பு மகள்  செல்வி  டாக்டர் டீனா  இவர்கள்  இருவரும்  இல்லறம் இணையும் விழா நடத்திக் கொள்ளும் இந்த நாளில், நாங்களும் சாட்சியாக இருந்தோம் என்று பெருமைப்படுகின்ற அளவிற்கு  நாமெல்லாம் இங்கே வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய நண்பர் கோ.க. மணி பேசும்போது என்னைச் சிறப்பிக்கும் போது கலைஞர், எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க் கட்சித் துணைத் தலைவராக எதிர்க் கட்சி கொறடாவாக அண்ணா அமைச்ச ரவையிலே அமைச்சராக  பிறகு முதல் அமைச்சராக என்று  இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்த பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்.
இதென்ன, புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என்று  யாராவது கேட்பீர்களேயானால்,  இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மணமக்களை நான் வாழ்த்துகிறேன்.  என்னுடைய அன்பை,  உண்மையான நெஞ்சத்தை, உறவு முறையில் காட்ட வேண்டிய அந்தப் பாசத்தை  மணமக்களுடைய குடும்பத்தாருக்கு குறிப்பாக அய்யா ராமதாஸ் அவர்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்.
குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக டாக்டர் ராமதாஸ் மணமகளாக இருந் தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ஆனாலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும்போது நாங்கள் ஒன்று பட்டு நிற்போம் என்பதற்கு  நீங்கள் காணுகின்ற காட்சி தான்  சாட்சி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

 நம்முடைய நாட்டில்  காலாகாலமாக நடைபெற்ற தமிழகத்தின் திருமணங்கள்  எல்லாம்    சங்கக் காலத்துத் தி
ருமணங்கள் எல்லாம்  ஞாயும் யாயும்  யாராகியரோ, எந்தையும் முந்தையும் எம்முறை கேளிர்   நானும் நீயும் எவ்வழி அறிதும்   செம்புலப் பெய் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே     நீ யாரோ, நான் யாரோ    உன்னுடைய தந்தை யாரோ     தாயார் யாரோ   செம்புலப் பெய் நீர் போல    சிகப்பு நிறத்திலே ஊற்றப்பட்ட தண்ணீர் அந்த வண்ணத்தோடு கலந்து ஒன்றாகி விடுவதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் கலந்து விட்டன என்று சொல்லி மணவிழாவை முடித்துக் கொண்டார்கள்.   
அந்தத் தமிழர்களுடைய திருமணம் இடைக்காலத்தில் தடை பட்டு விட்டன என்று நாம் எண்ணியதற்கு  மாறாக பெரியார் அவர்களுடைய கொள்கைப் பற்றால்,  அதனை  சட்டப் பூர்வமாக நிறைவேற்றியதோடு மாத்திரமல்ல    இப்படி  எங்களுடைய குடும்பங்களிலும்  தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும், நடத்துவோம்,  சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  நடத்துவோம் என்கின்ற உறுதியோடு நம்முடைய டாக்டர் அய்யா அவர்கள் இங்கே நடத்திக் காட்டிய திருமணம்,  பழந்தமிழர் காலத்திலே  பசும்புல்  தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை, அது காலத்தால் அழிவதுமில்லை என்று  வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக  இங்கே இருந்ததை நான் கண்டேன்.   வியந்தேன்,  வாழ்த்துகிறேன்.  அய்யா அவர்களையும், அவருடைய குடும்பத்தாரையும், அவருடைய கட்சித் தோழர் களையும் நான் வாழ்த்துகிறேன்.
அந்தக் கட்சியிலே உள்ள அத்தனை உறுப்பினர்களையும்   நான் வழக்கமாகச் சொல்வதைப் போல    என்னுடைய உடன்பிறப்புகள் என்ற முறையில்  அந்த உடன்பிறப்புக்களுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லி, நாம் அடையப் போகும் வெற்றிக்கு  இது  முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி  இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டக்கூடிய  போற்றக் கூடிய    விரும்பக் கூடிய விழாவாக  அமையும், அதைப் போல இந்தக் குடும்ப விழா எல்லோராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக, வெற்றிக்கு அடையாள விழாவாக இந்த விழா அமைந்திருக்கின்றது என்று கூறி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி
இன்று  டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய பேரனுக்கான திருமணம்,  இனி கொள்ளுப்
பேரனுக்கு நடைபெறுகின்ற திருமணவிழாவிலும் கலந்து கொள்கின்ற வாய்ப்பு நமக் கெல்லாம் கிடைக்கும்  என்று சொல்வதற்குக் காரணம்  அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன் என்று அப்படி நீடிப்பதற்கு  அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.