நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, January 26, 2014

குடியரசு நாளும் வன்னியர்களின் சோகமும்"





விடுதலைக்கு முந்தைய காலத்தில் வன்னியர்கள் பெருமளவில் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள். 1937 சட்டசபைத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றிபெற்று சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவானது. பணம் படைத்த சிறுபான்மை சாதியினர் உடனடியாக காங்கிரசு கட்சிக்குள் வரத்தொடங்கினர். அவர்களுக்கு பதவிகளும் தரப்பட்டன. உழைத்த வன்னியர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.

இதனை முறியடிப்பதற்காக, 1944 ஆம் ஆண்டில் 'தென்னார்க்காடு மாவட்ட தமிழ் அரசர்குல வாலிபர் சங்கம்' எனும் அமைப்பை வன்னியர்கள் தோற்றுவித்தார்கள். 1945 ஆம் ஆண்டில் 'வன்னியர் சங்கம்' உதயமானது. தென்னார்க்காடு மாவட்ட மாநாடு கடலூரிலும், வடார்க்காடு மாவட்ட மாநாடு ஆம்பூரிலும் நடத்தப்பட்டது. தூதுக்குழு அமைக்கப்பட்டு - காங்கிரசு மேலிடத்துக்கு தூது சென்றார்கள். ஆனாலும், காங்கிரசுக் கட்சி வன்னியர்களுக்கு மதிப்பளிக்கவில்லை.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக, 1946 ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் வந்தது. அதில் பத்து லட்சம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி எனப் பேசப்பட்டது. ஆகவே, அன்று வன்னியர்களின் மக்கள் தொகை 80 லட்சம் பேர் என்பதால் 8 உறுப்பினர்களின் இடங்களை வன்னியர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியிடம் கேட்டார்கள். அது மறுக்கப்பட்டதால், ஒரு பிரதிநிதியாவதுக் கொடுங்கள் என்றுக் கேட்டார்கள். அதுவும் மறுக்கப்பட்டது. மாணிக்கவேலர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்விகண்டார்.

217 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. (அதுமட்டுமல்ல, இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 52 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட இதர பிற்படுத்தப்பட்டோர் OBC பிரிவிலிருந்து ஒரே ஒருவர் கூட உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்படவில்லை).

இப்படியாக, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பே இல்லாத ஒரு அரசியல் நிர்ணய சபை, ஆங்கிலேயர்கள் 1935 ஆம் ஆண்டில் கொண்டுவந்த 'இந்திய அரசுச் சட்டம் 1935' என்பதைக் காப்பியடித்து அதன் மறுபதிப்பாக இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கினார்கள்.

இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட ஜனவரி 26 - குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது. வன்னியர்களும் அதனைக் கொண்டாடுகிறார்கள். சட்டையில் தேசியக் கொடியைக் குத்திக் கொள்கிறார்கள்.

"வன்னியர்களின் எதிர்வினை"

சுதந்திர இந்தியாவில் நடந்த ஜில்லாபோர்டு தேர்தலில், தென்னார்க்காடு மாவட்டத்தில் காங்கிரசை மண் கவ்வ வைத்தார்கள் வன்னியர்கள். அதை அடுத்து 1952 ஆம் ஆண்டு தேர்தலிலும் வன்னியர் பகுதிகளில் படுதோல்வி அடைந்தது காங்கிரசுக் கட்சி.

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் - நாடெங்கும் மிகப்பெரிய புகழின் உச்சத்தில் இருந்த காங்கிரசு கட்சி, வன்னியர் பகுதிகளில் மட்டுமே படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(இவ்வாரு ஒழிக்கப்பட்ட காங்கிரசுக் கட்சி மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, 1952 தேர்தலில் வெற்றிபெற்ற வன்னியர்களே ஆதரவளித்தார்கள் - அதன் விளைவாகவே ராஜாஜியும் காமராசரும் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக ஆனார்கள் என்பது தனி வரலாறு)-


- அருள்