நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, June 19, 2011

சமச்சீர் கல்வியை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு...

சமச்சீர் கல்வியை ரத்து செய்ததற்கு 62 சதவீதம் பேர் எதிர்ப்பு: லயோலா கல்லூரி கருத்து கணிப்பு
 
லயோலா கல்லூரி சார்பாக  கடந்த சில நாட்களாக 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்துசெய்து சட்டத்திருத்தம் நிறைவேற்றியுள்ளதற்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாய்ப் பதிவாகியுள்ளது.

 
ஆதரவு - 35.5 (பாடத்திட்டம் செம்மையாகத் திட்டமிடப்படாததால் ஓராண்டு ஒத்திவைப்பதில் தவறில்லை - 22.1, திமுக கட்சி / தலைவர்களைப் புகழ்ந்து திணித்துள்ள பாடங்களை மாற்ற அவகாசம் தேவை - 11.7, சமச்சீர் கொள்கையே தவறு, பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்குத் தரப்பட வேண்டும் - 1.7).

 
எதிர்ப்பு - 62.3 (இது சமூகநீதிக்கு எதிரான முடிவு, தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் நிர்ப்பந்தத்திற்கு அரசு பணிந்துவிட்டது - 31.8, நடைமுறைப்படுத்தும்போதுதான் அதிலுள்ள குறைநிறைகள் தெரியும் என்பதால் இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தி, அந்த அனுபவத்தின் பின்னணியில் அடுத்த ஆண்டு திருத்தம் செய்துகொள்ளலாம் - 9.6, ஏற்கனவே பாடபுத்தகங்கள் அச்சிடப்பட்டு விட்டதால் அரசுக்கு இழப்பு - 5.4, ஆட்சி மாறும்போது முந்தைய அரசு நிறைவேற்றிய சட்டங்களையும் மாற்றுவது தவறான அணுகுமுறை - 15.5).
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததற்குத் தடை விதித்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்புள்ளது. இது மிகச் சரியான தீர்ப்பு என்றும், காலதாமதம் செய்யாமல் சமச்சீர் கல்வியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்  என்றும் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கினர் (74.7) தெரிவிக்கின்றனர்.

 
அதிமுக அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கதாக இல்லாவிட்டாலும், மேல் முறையீடு செய்து மேலும் தாமதமாக்காமல், மாணவர் நலன் கருதி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் கணிசமானோர் (14.5) தெரிவிக்கின்றனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என மிகச் சிலரே (7.6) கருதுகின்றனர்.




சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பது சரியான முடிவு அல்ல: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதுபாடத்திட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைப்பது சரியான முடிவு அல்ல என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
   
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் கோவையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமச்சீர் கல்வித் திட்டத்தில் பொது பாடத்திட்டத்தை முழுவதுமாக நிறுத்திவைப்பது சரியான முடிவு அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம் முதலே கூறி வருகிறது. பாடத்திட்டத்தை முடிவு செய்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்படுள்ள நிபுணர் குழுவில், கல்வியாளர்களாக இரு தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. பொருத்தமான அனுபவம் மிக்க கல்வியாளர்களை இக் குழுவில் இணைக்க வேண்டும்.
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக சமச்சீர் கல்வித் திட்டத்தில் முந்தைய அரசு அமல்படுத்தவில்லை. மாநில பாடம், மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் ஆகிய நான்கு வாரியங்களை ஒன்றாக இணைப்பது, போதனை முறை ஒரே மாதிரியாக இருப்பது, அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, சமச்சீர் கல்வி சம்பந்தமான அனைத்து அம்சங்களையும் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.



கல்வி தாமதம்: தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை போவதாக சந்தேகம் எழுகிறது: திருமா 



சமச்சீர் கல்வியை தாமதப்படுத்துவன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை போவதாக சந்தேகம் எழுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறதோ என ஐயப்பட நேருகிறது. பெருந்தன்மையோடு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். திமுக அரசு கொண்டுவந்தது என்பதற்காக மக்கள் நலத்திட்டங்களை அரசு கைவிடக்கூடாது. சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை தாமதப்படுத்துவன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை போவதாகவும் சந்தேகம் எழுகிறது.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே உள்ளிட்டோரை இனஅழிப்பு குற்றவாளிகளாக ஐ.நா. அறிவிக்க வேண்டும் என்றார்.



சமச்சீர் கல்வி திட்டதை நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்திருப்பது பொதுமக்ககள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக லயோலா கல்லூரியின் தேர்தலுக்கு பிந்தைய கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.